
உதகை – தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய அரசு பேருந்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, தஞ்சாவூர் பகுதிக்கு புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் உதகையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உதகையிலிருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சாவூர் பகுதிக்கு புதிய பேருந்தை இன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேருந்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக தஞ்சாவூர் வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று முதல் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளதாக பேசினார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் 13 புதிய பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாகவும் தற்போது தஞ்சாவூர் பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேருந்து இயக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

