
30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…
சென்னை: தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. சமீபத்தில் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகச் சோதனை நடக்கிறது.
கோவை, உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு அக்., 23ம் தேதி, கார் குண்டுவெடிப்பு நடந்தது. குண்டு வெடிப்பிற்கு மூளையாகச் செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன், இதில் பலியானார். கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் ஜமேஷா முபீன் படித்தார்.
அரபிக்கல்லூரியில் படித்தவர்கள், ஜமேஷா முபீனுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயல்களுக்காகப் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, கிணத்துக்கடவு பழைய பஸ் நிலையம் அருகே மொபைல் போன் கடை நடத்தி வரும் மஸ்தான் என்பவர் வீட்டிலும், மணிகண்டபுரம், கிணத்துக்கடவு அருகே சாகுல் அமீது என்பவர் வீட்டிலும், கவுண்டம்பாளையத்தில் தீயணைப்பு துறை அருகே உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் இப்ராகிம் என்பவரது வீட்டிலும், திமுக பிரமுகர் தமிமூன் அன்சாரி என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் ஆர்.எஸ்.புரம், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கிணத்துக்கடவு உள்ளிட்ட 23 இடங்களில் அரபிக்கல்லூரியில் படித்தவர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னையில் திரு.வி.க., நகர் முஜூபர் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரையில் புகாரி என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது இத்ரிஸ் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

