நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
தாங்கள் ஏற்கனவே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளதாகவும், கடுமையான சட்ட விதிகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இக்குறைபாடுகளைக் களைவதற்கும், தேர்வுச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்கும், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி உள்ளிட்டோரைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இனிவரும் தேர்வுகளின் நம்பகத்தன்மையும் நேர்மையும் உறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.




