புதுடில்லி: ‘லேட்டரல் என்ட்ரியில் ஆட்களை நியமிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு பறிக்கப்படுகிறது’ என்று ராகுலும், ‘பொதுத்துறை நிறுவனங்களை விற்றதன் மூலம், 5.1 லட்சம் வேலைவாய்ப்பு பறிபோய் விட்டது’ என்று கார்கேவும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
ராகுல் கண்டனம்
இது தொடர்பாக ராகுல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” மத்திய அரசு பணிகளில் ‘ லேட்டரல் என்ட்ரி ‘ மூலம் ஆட்களை நியமித்து ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்படுகிறது. பா.ஜ.,வின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியத்தின் பதிப்பு அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கவும் முயல்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புகள் பறிப்பு
காங்கிரஸ் தலைவர் கார்கே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்பதவிகளில் நேரடி நியமனங்கள் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு உரிமையை பா.ஜ., அரசு பறிக்கிறது.
இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை மாற்றும் பா.ஜ.,வின் சக்கர வியூகம் இதுதான். 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்றதன் மூலம் 5.1 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோனது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


