சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வரும் 28ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக இப்போதே கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளன. அந்த வகையில் கூட்டணி பேச்சு நடத்துவதற்கான குழுவையும், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவையும் திமுக சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, டி.ஆர்.பாலு தலைமையிலான கூட்டணி பேச்சு நடத்தும் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி., ஆ.ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு கூட்டணி கட்சிகளில் முதல்கட்டமாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தையை துவக்குகிறது.
வரும் 28ம் தேதி அறிவாலயத்தில் காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளை ஒதுக்கிய திமுக, இம்முறை அதை விட குறைவான இடங்களே ஒதுக்கும் என தெரிகிறது. ஆனால் 10க்கும் மேல் இடங்களை கேட்டு பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

