Lok Sabha Elections 2024: பத்திரிகை, டிவி சேனல் 24 மணி நேரமும் கண்காணிப்பு!

Advertisements

கரூர்: ஊடக சான்றளிப்பு, ஊடக மைய அறை திறக்கப்பட்டு பத்திரிகை, டிவி சேனல் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இதுகுறித்த அறிக்கை கணக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலில் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் வெளியிடப்படுவது மற்றும் ஒளிபரப்பப்படுவதை கண்காணிப்பதற்காகவும், விளம்பரங்களுக்கான சான்றளிப்பதற்காகவும் ‘ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு” அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேற்று (19ம் தேதி) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவிற்கான அறையும் (MEDIA CERTIFICATION AND MONITORING COMITTEE), ஊடக மையத்திற்கான (MEDIA CENTER) அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவிற்கான அறையில் தொலைக்காட்சிப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகும் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் இதர சேனல்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள்மூலம் கண்காணிக்கப்படும்.
கேபிள் டி.விக்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ய விரும்பினால் முன்னதாகவே ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவில் அந்த வீடியோவை அளித்து ஒப்புதல் பெற வேண்டும்.

கேபிள் டிவி சேனல்கள் மற்றும் இதர சேனல்களில் ஒளிபரப்பப்படும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை ஒளிபரப்பப்படுகின்றது என்பது கணக்கெடுக்கப்பட்டு, கணக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் விளம்பரத்திற்கான செலவு சேர்க்கப்படும் என்றார்.இந்த ஆய்வின்போது டிஆர்ஓ கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையத்காதர், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *