Lok Sabha Election 2024: சனாதனம் பற்றி தரக்குறைவாக பேசி இந்துக்கள் மனதை தி.மு.க. காயப்படுத்துகிறது!

உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய மந்திரி அமித்ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு-ஷோவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

நான் கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராளுமன்ற தேர்தலில் பொன்.ராதா கிருஷ்ணன், விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினி ஆகியோருக்கு வாக்குகளை சேகரிக்க வந்த எனக்கு மிகச்சிறப்பான வரவேற்பை தந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தல் தேசம் முழுவதும் நடக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியினர் மோடிக்காக சிறப்பாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. 3,4 நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் இந்த தேர்தலில் உங்களிடம் கேட்டுக் கொளவது ஒன்றுதான். அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் கேவலமாக பேசி கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தி உள்ளனர். நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

நான் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறேன். 3-வது முறையாக மோடி பிரதமராக வரும்போது 3-வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தேசம் வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெல்லும் என்கிறார்கள். 400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும். அது பொன்னாரையும் சேர்த்து தான் இருக்க வேண்டும்.

நீங்கள் பொன்னாருக்கு வாக்களிப்பீர்களா… தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துவீர்களா…? விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *