
சென்னை: மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரி சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது சம்பந்தபட்ட வேட்பாளர்கள் செக்கியூரிட்டி டெப்பாசிட் என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். பல ஆண்டுகளாக இந்த உயர்த்தபடவில்லை என்றும் இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவைப் பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மக்களவை தேர்தலில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் ரூ.25,000-மும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் ரூ.10,000-மும் டெப்பாசிட் செய்ய வேண்டும். இதில் பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்களாக இருந்தால் இந்தத் தொகையில் பாதி தொகையை டெப்பாசிட் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. தேர்தலுக்காகக் கோடிகணக்கில் செலவு செய்யக்கூடிய வேட்பாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகையை உயர்த்த வேண்டும்.
இதன் மூலமாகத் தேர்தலுக்கு அரசு செய்யக்கூடிய செலவு குறையும் என்பதால் குறைந்த பட்சமாக ரூ.10,000 உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அந்த மனு பரிசீலிக்கப் படவில்லையெனத் தன்னுடைய மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனப் பார்த்தீபன் தன்னுடைய மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வேட்பாளர்கள் டெபாசிட் தொகை சட்டப்படி வசூலிக்கப்படுகிறது. இதனை உயர்த்த கோரிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உத்தரவிட முடியாது. இந்த வழக்கைப் பொறுத்த வரையில் விளம்பரத்திற்காகத் தக்கல் செய்யப்பட்ட வழக்காகவே தெரிகிறது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

