தருமபுரி மாவட்டத்தில் விசிக நிர்வாகி வீட்டு இல்லத் திருமணத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட வேண்டும் என நான் சொன்னேனா இல்லையா? கரூருக்கு விஜய் தாமதமாக வந்தார். இதனால் அவர் மீது வழக்கு போடுங்கள் என நான் அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் பேசினேன். அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தியிருந்தா இப்படி நடந்திருக்குமா?
தேர்தலின்போது தவெகவை திமுக கணிக்கத் தவறிவிட்டது? தவெகவுக்கும் எதிராக ஏன் எதிர் அரசியலை திமுக செய்யவில்லை? விஜய் மீது அன்று நம்பிக்கை இல்லை. ஆனால் இன்று எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தவெகவுக்கு எதிரான அரசியலை திமுக ஏன் செய்யவில்லை? அதிமுக- பாஜகவின் ஆதரவை விஜய் கேட்கவில்லை. விசிக, காங்கிரஸின் ஆதரவைத்தான் கேட்டார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்ட போது, திமுகவைத் தனிமைப்படுத்தும் நோக்கம் என நான் முதலில் சந்தேகப்பட்டேன். அதிமுக ஆதரவுடன் தான் நீங்கள் ஆட்சி அமைக்க போகிறீர்கள் என நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன். பதவிக்காக நான் கூட்டணி மாறியதாக என் மீது வன்மத்தை கக்குகிறார்கள். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பொதுக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அப்போது இரவு 7 மணி அளவில் கூட்டம் அதிகரித்த காரணத்தால் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நடந்ததும் மீட்பு பணிகளில் ஈடுபடாமல் விஜய், அவரது கட்சி நிர்வாகிகள் எல்லாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அதிமுக, திமுக, பாஜக, விசிக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளே அங்கு கூடி மீட்பு பணிகளை செய்தன.
இந்த சம்பவத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது கூட விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.திமுக ஆதரவாளர்கள், கூட்டணி கட்சியினர், திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் என விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். ஆனால் ஸ்டாலினோ அரசியல் செய்ய விரும்பாமல் மீட்பு பணிகளில் துரிதம் காட்டினார்.
விஜய் அந்த நிகழ்ச்சிக்கு மதியம் வர வேண்டிய நிலையில் அங்கு பொதுமக்கள் அதிகளவில் கூடிவிட்டனராம். அவர்களால் அந்த கூட்டத்தில் இருந்து இயற்கை உபாதை கழிக்கக் கூட வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் நேரம் ஆக ஆக கூட்டம் கூடி, விஜய்யின் முகத்தை பார்க்க அவரது பிரச்சார பேருந்து பின்னால் பலரும் ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்த குறுகிய சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவம் நடந்து நீண்டகாலமா கரூர் மக்களை பார்க்க செல்லாமல் இருந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்முறையாக கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அங்கு பொதுக் கூட்டத்தையும் விஜய் நடத்தினார்….



