K. Annamalai Vs DMK: வாக்குறுதியைத் நிறைவேற்றாத தி.மு.க. அரசு.. அண்ணாமலை காட்டம்!

சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க., அரசின் சாதனை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி த.மா.க வேட்பாளர் வேணுகோபாலை ஆதிரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தைக் கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்ற வாக்குறுதியைத் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்புமின்றி பெட்ரோல், டீசல் விலையைப் பிரதமர் மோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதுதான் பா.ஜ.க அரசின் சாதனை.

பொருளாதாரத்தில் நாட்டை வளர்ந்த நிலைக்குப் பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை உறுதி செய்தவர் பிரதமர் மோடி. சீனாவாக இருக்கட்டும், பாகிஸ்தானாக இருக்கட்டும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தியாவுக்கான பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். சமநீதி, சமூக நீதியெனத் தி.மு.க., வினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *