
சாதி, மத விசயங்களைச் சட்டமன்றத்துக்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் சபாநாயகரும், அமைச்சர்களும் நடந்துகொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று, வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ள நிலையில் அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தை முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது என்று சுட்டிக் காட்டியுள்ளார். அமைச்சர் மரிய வில்சன் கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்வதாகவும், தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்று கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளைச் சட்டமன்றத்திற்குள் பேசுவது சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சாதி, மத விசயங்களைச் சட்டமன்றத்துக்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் சபாநாயகரும், அமைச்சர்களும் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




