
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்குத் துவங்குகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கைத் தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (ஹெச்.டி./எஸ்.டி.) தொலைகாட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.
கடைசியாகக் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிராகச் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியை இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடும்.
இரு அணிகளும் கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.
