
சென்னை: பள்ளியில் மாணவர்கள் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரைத்துள்ளது. இதற்குப் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: நெற்றியில் மத அடையாளங்களை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாணவர்களின் கையில் கயிறு கட்டக் கூடாது என எப்படி சொல்லலாம். நெற்றியில் திலகம் வைக்கத் தடை விதிக்கக் கூடாது.
கையில் கயிறு கட்டியிருப்பது ஜாதி கயிறு என எப்படி சொல்ல முடியும். நீதிபதி சந்துரு குழு உள்நோக்கத்துடன் ஹிந்துகளுக்கு எதிராகப் பரிந்துரைக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சி ஜாதி கட்சியா இல்லையா?. நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஏற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
‘நான் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்துள்ளேன். இது என்ன கட்சி ?’ எனப் பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

