
நாமக்கல்: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், இனமானப் பேராசிரியர் பிறந்த நாளில் “கனவு ஆசிரியர்” திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிக் கெளரவித்தார். பின்னர் அன்பில் மகேஷ் கூறியதாவது, ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது.
இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம். இவ்வாறு அவர் கூறினார்.


