Gaganyaan Mission: கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி!

Advertisements

புதுடில்லி: ககன்யான் திட்டத்திற்காகத் தமிழகத்தின் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றியைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அடுத்ததாகக் ககன்யான் திட்டத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்காக இஸ்ரோ, எல்விஎம்-3 ராக்கெட்டைத் தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் 8 டன் எடை கொண்ட பொருட்களைக் கொண்டு செல்லக்கூடிய திறன் படைத்தது இந்த ராக்கெட். சந்திரயான்-3 திட்டத்திலும் இந்த ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது.

ககன்யான் திட்டத்திற்காக இந்த ராக்கெட்டில் சில மாறுதல்களைச் செய்துள்ளது இஸ்ரோ. இந்த ராக்கெட்டை உந்தி தள்ளும் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரையோஜெனிக் இன்ஜினின் உந்துசக்தி, செயல்திறன் ஆகியவை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ புராபல்ஷன் வளாகத்தில் உள்ள சோதனை மையத்தில் கடந்த 13ம் தேதி சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை நடத்தப்பட்டது. இதில் இன்ஜினின் செயல்திறன், அதிகபட்ச தாக்குப்பிடிக்கும் திறன், உந்து சக்தி உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.

இந்தச் சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிவுற்றிருக்கிறது. இந்த இன்ஜின் குறைந்தபட்சம் 6350 நொடிகள் இயக்கப்பட வேண்டும். ஆனால் சோதனையில், 8810 நொடிகளில் வெவ்வேறு காலநிலைகளில் சிறப்பாக இயங்கியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *