
Gyanvapi Mosque | Archaeological Survey of India
அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்...
பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி வளாகம். கடந்த, 17ம் நுாற்றாண்டில் இங்கு இருந்த கோவிலை இடித்து, அதன் மீது இந்த வளாகத்தை, முகலாய அரசர் அவுரங்கசீப் கட்டியதாக ஹிந்துக்கள் சிலர், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து அந்த வளாகத்தில் அறிவியல்பூர்வமான விரிவான ஆய்வு நடத்தும்படி தொல்லியல் துறைக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அஞ்சுமன் இந்தசாமியா மஸ்ஜித் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து ஞானவாபி வளாக நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Gyanvapi Mosque | Archaeological Survey of India | Allahabad High Court | Ram temple | Inspection | Resumed
அதில் கூறப்பட்டதாவது: ஆய்வு செய்வதால், கட்டடத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என, தொல்லியல் துறை உறுதி அளித்துள்ளது. நீதியை நிலைநாட்டும் வகையில், உண்மையைக் கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு நடத்தலாம். இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றம் செய்யவும், தலையிடவும் விரும்பவில்லை. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஞானவாபி வளாக நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுமீது இன்று விசாரணை நடக்கலாமெனத் தெரிகிறது.இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஞானவாபி வளாகத்தில் தொல்லியல் துறையின் ஆய்வு பணியைத் துவக்கினர். இதனையடுத்து மசூதி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


