
“தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை” எனச் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலினை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது.
“ கோடை வெயில் ஆரம்பித்துக் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை. தற்போதும் நிதி தரவில்லை. அதிமுக, திமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு நிதி தருவதில்லை. நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்.
மேட்டூர் அணை அதிமுக ஆட்சியில் தூர்வாரட்டது. மேலும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 14 ஏரிகளில் 6 ஏரிகள் தூர்வாரப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீதம் உள்ள ஏரிகள் தூர்வாரப்படவில்லை. அதேபோல மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தைக் கிடப்பில் போடப்பட்டுள்ளது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

