
ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது! எடப்பாடி பழனிசாமி…
2026ல் அதிமுக ஆட்சியமைக்கும், அதற்கான அஸ்திவாரம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போடப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சங்கரன்கோவிலில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய இபிஎஸ்;- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது. பாஜக உடனான கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். 2026ல் அதிமுக ஆட்சியமைக்கும், அதற்கான அஸ்திவாரம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போடப்படும் என்றார்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி வருகிறார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லையென முழு பூசணிக்காயை சோற்றில் திணிப்பதுபோல் ஸ்டாலின் பேசுகிறார். இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. அதிமுக ஆட்சியில் உதயமான தென்காசி மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தைக் கூடத் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர் திமுக ஆட்சிமீது மக்களுக்கு வெறுப்பு அதிகமாகி உள்ளது. அரசின் மீதான வெறுப்பை மாற்றுவதற்கு சனாதனம் பற்றி உதயநிதி பேசினார். அது தற்போது பற்றி எரிகிறது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இதுதான் திராவிட மாடல். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைய செய்ய வேண்டும். தொண்டர்கள் அதற்கான களப்பணியை தற்போது முதல் தொடங்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து எனப் பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது பின்வாங்குவதேன்? காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சிதைந்துவிட்டது. போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார். திமுக ஆட்சிமீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக பிரதமர் வேட்பாளர் யாரெனக் கேட்கும் ஸ்டாலின், இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யாரெனக் கூற முன்வருவாரா? தமிழகத்தில் தற்போது திமுகவின் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்துக்காகவே தொடங்கப்பட்ட கட்சிதான் திமுக என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

