
புதுடில்லி:
ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது.
தனிநபர்களுக்கு முக்கிய ஆவணமான ஆதார் கார்டும், பான் கார்டும் பார்க்கப்படுகின்றன. வங்கி பரிவர்த்தனை, வருமான வரித்துறை போன்றவற்றில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாடு முழுவதும் வங்கிகணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், ஆதார் மற்றும் பான் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பலமுறை ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான கால அவகாசத்தை வழங்கி வந்துள்ளது. இப்போது, டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் பான் எண் உள்ளிட்ட விவரங்களை வைத்துக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்த தொடர் புகார்களையடுத்து, மத்திய அரசு ஆதார் மற்றும் பான் இணைப்பைக் கட்டாயமாக்கியுள்ளது.


