Coimbatore: கணவன் வீட்டில் அமர்ந்து கர்ப்பிணி பெண் போராட்டம்!

Advertisements

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகள் 26 வயது சௌந்தர்யா.இவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மலையாண்டி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் 24 வயது பொறியியல் பட்டதாரியான கோகுலகிருஷ்ணன் என்பவரும் கோவை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கோகுல கிருஷ்ணன் தனது பெற்றோரின் சம்மதம் இல்லாமல்  சௌந்தர்யாவின் பெற்றோர் சம்மதத்தோடு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

கோகுல கிருஷ்ணன் பிற்பட்ட வகுப்பையும் சௌந்தர்யா ஆதிதிராவிடர் வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு கோகுலகிருஷ்ணன் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து சௌந்தர்யாவுடன் குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தாரெனக் கூறப்படுகிறது.

தற்போது சௌந்தர்யா 7 மாத கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் கோகுலகிருஷ்ணன் தனது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை என்று கூறி கடந்த டிசம்பர்  மாதம் எட்டாம் தேதி சொந்த ஊராண மலையாண்டி நாயக்கன்பட்டிக்கு வந்தார்.அதன் பின்பு ஓசூருக்கு திரும்பி வராததோடு  சௌந்தர்யாவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சௌந்தர்யா பலமுறை தனது கணவன் கோபாலகிருஷ்ணன் அலைபேசியில் தொடர்புகொண்டும் அவர் பேச மறுத்து விட்டார்.எனவே கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி  சௌந்தர்யா தேனி காவல் நிலையத்தில் தனது கணவனைச் சேர்த்து வைக்கக் கோரி புகார் மனு அளித்தார்.

இதையடுத்து தேனி காவல்துறையினர் மாவட்ட கண்காணிப்பாளர் இடம் புகார் அளிக்க அறிவுறுத்தியதை அடுத்து அங்குப் புகார் கொடுக்கப்பட்டது.இதையடுத்து புகார் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லையான கானாவிலக்கு காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து கானாவிலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கோகுல கிருஷ்ணனை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில்  மதுரை உயர்நீதிமன்றத்தில் தனது கணவனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி ஆட்கொணர்வு மனு செய்தார்.

இந்நிலையில்  கோகுலகிருஷ்ணன் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்த வில்லை என்றும். சௌந்தர்யாவுடன் வாழ விருப்பம் இல்லாமல் பிரிந்து சென்று வெளியேறி விட்டதாகவும் கூறியுள்ளார்.இதனை அடுத்து ஆட்கொணர்வு மனு வழக்கு  முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில்  கோயம்புத்தூரிலிருந்து தனது உறவினர்களுடன் புறப்பட்டுக் கிளம்பி வந்த சௌந்தர்யா மலையாண்டி நாயக்கன்பட்டியில் உள்ள கோகுல கிருஷ்ணன் வீட்டில் அமர்ந்து தனது கணவனுடன் சேர்த்து வைக்கக் கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தகவல் அறிந்த கானாவிலக்கு சார்பு ஆய்வாளர் பிருந்தா  தலைமையில் போலீசார்   மலையாண்டி நாயக்கன்பட்டிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சௌந்தர்யாவுடன் சமாதானம் செய்து காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் மனு அளிக்கும்படி கூறியும்அதற்கு  மறுப்பு தெரிவித்து சௌந்தர்யா,

தனது கணவனுடன் தன்னை சேர்த்து வைக்கும்படி கூறி தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சௌந்தர்யா போலீசாரிடம் ஆண்டி விட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *