
M.K. Stalin | Smriti Irani | A. Raja | 2G spectrum case
திமுகவை விமர்சித்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்…
சென்னை: நாடாளுமன்றத்தில் திமுகவை விமர்சித்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்பி ஆ.ராசா, கைது செய்யப்படுவீர் என என்னை அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். அப்படியென்றால், உச்ச நீதிமன்றம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா? நாட்டின் நீதிமன்றங்களைப் பாஜ அச்சுறுத்தி வைத்துள்ளதா? எதிர்க்கட்சி எம்.பிக்களை கைது செய்வதாக மிரட்டுகிறார்கள் என அவைத் தலைவரிடம் முறையிட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மணிப்பூர் பற்றிய ராகுல் பேச்சுக்குப் பதில் சொல்ல முடியாத ஸ்மிருதி, திமுக மீது அவதூறு சுமத்தி திசைத்திருப்ப முயன்றுள்ளார். திமுக எம்.பி. ஆ.ராசா சிறைக்கு அனுப்பப்படுவார் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பொறுப்பு இல்லாமல் பேசியதிற்கு கண்டனம் தெரிவித்தார். ஸ்மிருதி இரானியின் பொறுப்பற்ற பேச்சுக்கு ஆ.ராசா உடனடியாகப் பதிலடி கொடுத்தார். நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக மிரட்டுவதா என்ற ஆ.ராசாவின் கேள்விக்குரிய பதில் தரப்படவில்லை.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக நடுங்குகிறது. மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக. பாஜகவின் நடுக்கம் அவரது கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. திமுகவின் பெயரைக் கேட்டாலே டெல்லி உட்பட நாடு முழுவதும் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். மத்திய பிரதேசத்திலும் அந்தமான் நிகோபார் நிகழ்ச்சிகளிலும் பேசும்போது கூடத் திமுகவை பிரதமர் மோடி விமர்சிக்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.

