
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்பதில் பங்கேற்று பிரபலம் அடைந்தவர் பாலா. இவரது காமெடி நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு கிடைத்து, தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் இடம்பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலாவை பின்னணியில் இருந்து யாரோ சிலர் இயக்குவதாகவும், அவர் வெளிநாட்டு கைக்கூலி என்றும் யூட்யூபில் வீடியோக்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து நடிகர் பாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னை எதிர்மறையாக விமர்சித்து யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். என் மீது ஏன் இவ்வளவு வன்மம்? ஒரே ஒரு படம் பண்ணினேன். அந்த படத்துக்கு பிறகு எதிர்மறையான விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன.ஆம்புலன்ஸில் சிறிய நம்பர் பிளேட் பிரச்சினையை வைத்துக் கொண்டு என்னை எவ்வளவோ பண்றாங்க. இந்த ஆம்புலன்ஸ் மூலமாக எத்தனை மக்கள் பலன் பெற்றுள்ளார்கள். நாம் செய்யக்கூடிய பாசிட்டிவான விஷயங்கள் இதையும் யாரும் சொல்வதில்லை.
அது கூட பரவாயில்லை. இவன் ஹாஸ்பிடல் கட்டுறான் எப்படி இவனுக்கு இவ்வளவு காசு வருகிறது என்று விமர்சிக்கிறார்கள். நான் ஈவென்ட் போகிறேன், ஆங்கரிங் பண்ணுகிறேன், படத்தில் நடிக்கிறேன், விளம்பரங்களில் நடிக்கிறேன், வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன். நான் சொந்தமாக சம்பாதிக்கும் பணத்தில் தான் மக்களுக்கு உதவி செய்கிறேன்.மருத்துவமனை கட்டுவதற்கு அவ்வளவு காசு வேண்டுமே என்கிறார்கள். நான் என்னுடைய கால் கிரவுண்ட் நிலத்தில் முன்னால் கால் கிரவுண்ட் வாங்கி மொத்தம் அரை கிரவுண்டு நிலத்தில் கிளினிக்கை கட்டுகிறேன்.
அதற்குப் பதிலாக ஆடம்பர காரும் சொகுசு பங்களாவும் கட்டி இருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் வந்திருக்காது என்று சிலர் சொன்னார்கள்.அடுக்குமாடி வீட்டுக்கு பதிலாக ஹாஸ்பிடலும், ஆடம்பர காருக்கு பதிலாக ஆம்புலன்ஸும் வாங்க நினைத்ததால் எனக்கு இவ்வளவு நெருக்கடி வருகிறது. இதனால் நான் தளர போவதில்லை. எனக்காக இருக்கும் மக்களுக்காக நான் தொடர்ந்து ஓடுவேன்” என்று கூறியுள்ளார்.


