
காலைச் சிற்றுண்டி திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே அதிமுக ஆட்சியில் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்…
சென்னை: இன்று சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 22ஆம் ஆண்டு நினைவுத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர் மூப்பனார். 22 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது என்றால், தமிழகத்திற்கு அந்தளவுக்கு நல்லது செய்துள்ளார்.
தன்னுடைய குடும்ப சொத்தை, தஞ்சாவூர் ரெயில் பாதைக்குக் கொடுத்தவர். அமைச்சர் பதவி வேண்டும் என்று தற்போது ஒரு சில கட்சிகள் இருக்கும் நிலையில், 3 பிரதமர்களை உருவாக்கும் வல்லமை படைத்து இருந்தவர் மூப்பனார் என்றார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காலைச் சிற்றுண்டி திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே அதிமுக ஆட்சியில் தான்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதே இந்தத் திட்டம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்றார்.

