
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ‘ஏர் ஷோ 2024’ என்ற பெயரில் முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தச் சாகச நிகழ்ச்சியானது இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.
மேலும் இந்த விமான சாகசத்தில் ரபேல், தேஜஸ், சூகோய் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கின்றன.அதுமட்டுமல்லாமல் ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.
இதன் காரணமாக இன்று மற்றும் நாளைச் சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை காமராஜர் சாலையில் நாளைப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் காந்தி சிலை, போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகளுள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், மற்ற வாகனங்கள் ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்று, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருவான்மியூரிலிருந்து காமராஜர் சாலை வழியாகப் பாரீஸை நோக்கி வரும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாகக் காந்தி மண்டபம் சாலை வழியாக அண்ணா சாலையைப் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


