
புதுடெல்லி:மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை திறந்திருக்கும்.
ஆனால் சில ஊழியர்கள் பணிக்குத் தாமதமாக வருவதாகவும், சீக்கிரமாகப் புறப்பட்டுச் செல்வதாகவும் புகார்கள் எழுந்தது. கொரோனா காலத்துக்குப் பிறகு பலர் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்தவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள், காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். அந்த நேரத்துக்குள் வராத பட்சத்தில் அரை நாள் சாதாரண விடுப்பு கழிக்கப்படும். ஊழியர் ஒரு குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்கு வர முடியாவிட்டால், அதை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் நேரமின்மையை கண்காணிப்பார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


