நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து!

Lorry Accident
Advertisements

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் வந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் பிஸ்கட் கம்பெனிக்குச் சொந்தமான அந்தப் பேருந்து அம்மாபேட்டை, பவானி, லட்சுமி நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூரிலிருந்து பெருந்துறை சிப்காட் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பேருந்தை மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (வயது 34) என்பவர் ஓட்டினார். பேருந்து பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பிரிவு சாலையைக் கடந்து சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

அங்குச் சாலையின் வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியிலிருந்து பணியாளர்கள் சிமெண்ட் லோடு இறக்கி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாகப் பிஸ்கட் கம்பெனியின் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.

பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

பெரும்பாலானவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டதால் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பினர்.

பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமெனப் போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *