
சுய உதவி குழு கடன் உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் மூலம் 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 6-வது பட்ஜெட் இதுவாகும். அதே போல் மோடி 2.0 அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட்டும் இதுதான். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்றவுடன், அடுத்த ‘முழு பட்ஜெட்’ ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-சுய உதவி குழு கடன் உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் மூலம் 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர். வேளாண் துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.
மீன் வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. யூரியாவை தொடர்ந்து டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


