
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வசித்தவர் சரண்யா. மதுரையை சேர்ந்த சரண்யா, பாஜக மகளிரணியில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். இவரை மர்ம நபர்கள் சிலர் சேர்ந்து நேற்று இரவில் வெட்டிக் கொலை செய்து விட்டனர். சரண்யாவின் முதுகில் முதல் வெட்டு விழுந்த நிலையில், அதைத் தொடர்ந்து கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்திருந்தனர்.
சரண்யாவின் முதல் கணவர் சண்முகசுந்தரம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.பாலன் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக துணை.தலைவராக இருந்துள்ளார் கட்சிப்பணிகளில் ஈடுபட்டபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் கணவர் பாலனுடன் வசித்து வந்துள்ளார் சரண்யா. பாலனும், சரண்யாவும் சேர்ந்து உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.நேற்று இரவில் வழக்கம் போல பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று விட்டனர்.
சரண்யா மட்டும் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு அருகே மீன் மார்க்கெட் சந்து பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சரண்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.
