
டோரன்டோ: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்திக் கனடாவில் நடந்த போராட்டத்தில் ஹிந்து, யூதர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றனர்.
கடந்த வாரத்தில் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. ஹிந்துக்கள் வீடுகள் குறி வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றன. ஹிந்துக்கள் குறி வைத்துத் தாக்கப்படுவதாகச் சமூக வலை தளங்களில் போலியான தகவலும் பரப்பி விடப்படுகிறது.
வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக வாழும் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் எனப் பல உலகில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று (ஆக-12) கனடாவில் டவுண்டவுண் டோரோன்டோவில் ஹிந்துக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஹிந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றனர். வீ வாண்ட் ஜஸ்டிஸ் எனக் கோஷங்கள் எழுப்பினர். மேலும் வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களை காப்பாற்ற அந்நாட்டு இடைக்கால அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கனடா அரசு உயர் அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.
ஐ.நா முன்பு போராட்டம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நாத்தலைமை அலுவலகம் முன்பு ஹிந்துக்களுக்கு ஆதரவாக ‘ஹிந்து ஆக்சன்’ அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



