
ஆட்டை வெட்டுவது போலத் தன்னையும் வெட்ட உள்ளதாக முகநூலில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகக் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்துள்ளது. அண்ணாமலையை கொச்சை படுத்தி பேசுவது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டின் மீது அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி நடு ரோட்டில் வெட்டியுள்ளார்கள்.
இதன் மூலம் பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளனர். அங்குப் பாஜகவினர் புகார் அளித்தும் இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவில்லை. எனது முகநூல் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கண்ட துன்டமாக வெட்டுவோம் எனத் தெரிவித்துள்ளனர். இவர்கள் யார் என்பதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். தொடர்ந்து ஆட்டைப் போலத் தன்னை வெட்டுவதாகத் தெரிவித்து வருகின்றனர்.
காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கீழ்த்தரமான அரசியலாக உள்ளது. சட்டம் ஒழுங்குச் சந்தி சிரித்து வருகிறது. ஆட்டை வெட்டுவது வேறு, ஆட்டில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி வெட்டுவது வேறு. நேரடியாக அரசியல் களத்தில் மோதுவதற்கு துப்பு இல்லை. அன்றேக்கே இது தடுக்கபட்டிருந்தால் இப்படி தொடர்ந்து கொலை மிரட்டல் வந்திருக்காது. இனி தமிழகத்தில் மிகப் பெரிய பிரச்சனையைச் சந்திக்க போகிறார்கள். அந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள் தடுத்து அவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழிசை சௌந்தரராஜன், அமித்ஷா பேசுவது கண்டிப்பு என எப்படி சொல்ல முடியும், அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம், நமக்கு எப்படி தெரியும் எனத் தெரிவித்தார்.



