
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணியை ஆதரித்துப் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
* பீகார், கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதது ஏன்?
* பீகாரில் அனுமதி உள்ளபோது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதியில்லையா?
* தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயாராக இல்லை.
* சிலரின் சுயலாபம் மற்றும் அதிகாரத்திற்காக அ.தி.மு.க.வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
* கரையான் போல் சிலர் அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
* எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
* நம்பிக்கை துரோகி என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்குதான் சரியாகப் பொருந்தும்.
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை நிறுத்த வேண்டாமெனப் பேசச் சொன்னார் எடப்பாடி பழனிசாமி.
* ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
* தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டிருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா?
* 2026 சட்டமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராகி விடுமா?
* சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதால் விக்கிரவாண்டி தேர்தலைப் புறக்கணிக்கிறேன் எனக் கூறிய எடப்பாடி இன்று வேறு காரணம் கூறுகிறார்.
* புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை வந்தபிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறாரென அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.


