Anbumani:ஏழை, நடுத்தர மக்கள் வாழவே கூடாது என்பது தான் திமுகவின் திட்டமா? ஆளுங்கட்சியை அலறவிடும் அன்புமணி!

Advertisements

ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் இந்த வரி மற்றும் கட்டண உயர்வு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆட்சிக்கு வந்து விட்டோம், இனி மக்களின் தயவு தேவையில்லை என்ற அதிகார மமதையுடன் செயல்படும் திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள் என அன்புமணி ராமதாஸ் காட்டமாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் இந்த வரி மற்றும் கட்டண உயர்வு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

மாத வருமானம் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ள பணியாளர்களுக்கான தொழில் வரியை 35% வரை உயர்த்தியுள்ள சென்னை மாநகராட்சி, அதற்கும் கூடுதலாக ஊதியம் பெறுவோருக்கான தொழில்வரியை உயர்த்தவில்லை. அதேபோல், பெரிய அளவிலான நிறுவனங்களுக்குச் சலுகைகளை வாரி இறைக்கும் சென்னை மாநகராட்சி, தேநீர்க் கடைகள், மருந்துக் கடைகள், முடி திருத்தும் கடைகள் போன்றவற்றுக்கான உரிமத் தொகையை ரூ.10 ஆயிரம் ஆகவும், வேறுசில கடைகளுக்கான உரிமத் தொகையை ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் கூட இந்த அளவுக்குக் கட்டணக் கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் தான் 175% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆனால், மாநகர மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படுவதில்லை. 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவில் வீடுகளைக் கட்ட விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்குச் சலுகை வழங்குவதாகக் கூறி அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான கட்டணம் ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பயன்களைவிடப் பாதிப்புகளே அதிகம்.

சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவர்கள்மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகளைச் சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்து விட்டோம், இனி மக்களின் தயவு தேவையில்லை என்ற அதிகார மமதையுடன் செயல்படும் திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *