Anbumani: 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு கூடுதல் லாபமா? திட்டவட்டமாக மறுத்த அன்புமணி!

பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.5%க்கும் அதிகமாக பலன் அடைவதாக வெளியான ஆர்.டி.ஐ. தரவுகளுக்கு அன்புமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்று விட்டதாக திரிக்கப்பட்ட, அரைகுறை விவரங்களுடன் கூடிய புள்ளிவிவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டப்படி பதில்களாக வெளியிட்டுள்ள தமிழக அரசு, இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை தொகுத்துள்ள தமிழக அரசு, அதை தமிழக அரசின் செய்திக்குறிப்பு என்ற குறிப்பு இல்லாமல் அனாமதேய செய்தி போன்று பிரைவேட் நியூஸ் என்ற பெயரில் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி செய்தி வெளியிடும்படி கட்டாயப்படுத்துவதாக ஊடக நண்பர்கள் சிலரே என்னிடம் குறைபட்டுக் கொண்டனர்.

திமுக அரசு மேற்கொண்டு வரும் வன்னியர் சமூகநீதி படுகொலையில் ஊடகங்களையும் கூட்டாளிகளாக்கக் கூடாது; அந்த பாவத்தில் பத்திரிகையாளர்களையும் பங்கேற்கச் செய்யக் கூடாது. இது போன்ற மோசடிகளை அரங்கேற்றுவதன் மூலம் வன்னியர்களுக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயன்றால் அதற்கு கிடைக்கப் போவது படுதோல்வி தான்.

தமிழக அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்தால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *