
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி: அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை இந்தப் பரிசோதனை நடந்ததாகவும், பரிசோதனையின்போது ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாகச் செயல்பட்டதாகவும் மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையை ராணுவ தளபதி அனில் சவுகான் உள்பட பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரிகளும், டிஆர்டிஓ அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.
‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.



