
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் . இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு கடந்த 19ஆம் தேதி அவரது தரப்பில் கோரப்பட்டது. ஆனால், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் இருப்பதால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்த நிலையில் இந்த மனு இன்று (அக்.,30) விசாரணைக்கு வந்த நிலையில், மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

