
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய “சக்தி” தீவிர புயல், தெற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வலுகுறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது.
மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து, 7-10-2025 (நாளை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுகுறையக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



