
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் 14-ந் தேதி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (12-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதிவரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது…
திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் 14-ந் தேதி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (12-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதிவரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரதோஷ நாளான இன்று காலைச் சதுரகிரிக்கு செல்ல அதிகாலையிலேயே அடி வாரத்தில் ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறை அலுவலர்கள் பக்தர்களின் உடைமைகளைச் சோதனையிட்டு மலையேற அனுமதித்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேறப் பக்தர்களுக்குத் தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. பக்தர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளைக் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.


