350 கிராம் எடையில் பிறந்த அதிசயக்குழந்தை!

Advertisements

கொச்சி:

தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெற 9 மாதங்கள் நிறைவு பெற வேண்டும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் எடை பொதுவாக 2.26 கிலோவிலிருந்து 5 கிலோ வரை இருக்கும்.

9 மாதங்களுக்குக் குறைவான காலத்தில் குழந்தை பிறந்தால் குறைமாத பிரசவமாகக் கருதப்படும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவே இருக்கும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.

அந்தக் குழந்தைகளின் எடை அதிகரிக்கவும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது.

இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அந்தக் குழந்தையைத் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்துத் தொடர்ந்து 100 நாட்கள் வைத்துச் சிகிச்சை அளித்தனர்.

தற்போது அந்தக் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக டாக்டர் ரோஜோ ஜாய் கூறுகையில், எந்தவொரு பிறந்த குழந்தைக்கும், உயிர்வாழ்வதற்கு பொதுவாகத் தாயின் வயிற்றில் குறைந்தது 24 வாரங்கள் வளர்ச்சி தேவைப்படுகிறது.

இருப்பினும், ‘நோவாவின் விஷயத்தில், குழந்தை உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பே, 23 வாரங்களில் பிறந்தது.

மற்றொரு குறிப்பிடத் தக்க சிக்கல் என்னவென்றால், நோவாவின் தாய்க்கு பிரசவத்தின்போது தொற்று இருந்தது, இது குழந்தைக்குப் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது.

கூடுதலாக, குழந்தையின் பிறப்பு எடை வெறும் 350 கிராம் என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே சிகிச்சையைத் தொடங்கினோம்.

குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியடையாததால், பிறந்தவுடன் குழந்தைக்கு உடனடியாகச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் பராமரிக்கப்பட்டது.

உடல் எடையை அதிகரிக்கும் சிகிச்சையும் வழங்கப்பட்டது.

நோவா இப்போது முழுமையாக ஆரோக்கியமாக உள்ளான். சுயமாகச் சுவாசிக்கிறான். எனவே தாயுடன் சாதாரண வார்டுக்கு அவன் மாற்றப்பட்டுள்ளான்.

குழந்தை நோவாவுக்கு எடை அதிகரித்துள்ளது. தற்போது அவனின் எடை 1.850 கிலோ என்ற அளவில் உள்ளது. தாயும், குழந்தையும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் விஷம் குடித்ததாகக் கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி காலைப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் எடை 12.4 அவுன்ஸ் அதாவது 350 கிராம் மட்டுமே.

எனவே 350 கிராம எடையுடன் பிறந்த நோவா, தெற்கு ஆசியா நாடுகளில் மிகக்குறைவான எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற பெயரைப் பெற்றுள்ளான். இதற்கு முன்பு ஐதராபாத்தில் பிறந்த குழந்தை 375 கிராம் எடையுடன் இருந்தது.

அதேபோல் இதே எர்ணாகுளத்தில் பிறந்த மற்றொரு குழந்தை 380 கிராம் எடையுடன் இருந்தது. டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் அந்தக் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *