வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் அதிக முறை முதலிடம் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தகுதி வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட புத்தகங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு புத்தக விபரங்கள்:
மாதிரி வினாத்தாள் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 120 ரூபாய்க்கும், கணிதத் தீர்வுப் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 175 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
12ஆம் வகுப்பு புத்தக விபரங்கள்:
அறிவியல் பாடப்பிரிவு மற்றும் கலைப் பாடப்பிரிவு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 140 ரூபாய்க்கும், கணிதத் தீர்வுப் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 160 ரூபாய்க்கும், கணிதத் தீர்வுப் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 160 ரூபாய்க்கும், இயற்பியல் தீர்வுப் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எங்குக் கிடைக்கும்?
மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் விற்பனை செய்யப்படும் இந்தப் புத்தகங்கள் சிவகாசியில் அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகரவை மேல்நிலைப் பள்ளி, விருதுநகரில் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியென இரண்டு பள்ளிகளில் கிடைக்கும்.