
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அட்டவணைகுறித்து நவ. 29ல் ஐ.சி.சி., முடிவெடுக்க உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் கடந்த 1996ல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடந்தது. இதன் பின் பாகிஸ்தானில் எவ்வித ஐ.சி.சி., தொடரும் நடக்கவில்லை. கடந்த 2008ல் மும்பை, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பாகிஸ்தான் சென்றதில்லை. 2009ல் லாகூரில் இலங்கை வீரர்கள்மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது.
இதனால் எந்த அணியும் பாகிஸ்தான் செல்ல மறுத்தன. ஒரு வழியாக, 2021ல் ஆசிய கோப்பை தொடர் அங்கு நடந்தது. ஆனால், இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் இலங்கையில் நடந்தன.
தற்போது 2025 பிப்., -மார்ச் மாதம் பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி மறுத்துள்ளது. தவிர, தனது போட்டிகளைத் துபாயில் நடத்த வேண்டும் என இந்தியா தெரிவித்தது. இந்தக் கோரிக்கையை ஏற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) மறுத்தது.
வரும் டிச. 1 முதல் ஐ.சி.சி., தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன், தற்போதுள்ள கிரெக் பார்கிளே தலைமையிலான நிர்வாகம், சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சைக்குத் தீர்வு காண வேண்டும் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதனால் வரும் நவ. 29ல் வீடியோ கான்பெரன்சிங் வழியாகக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் அட்டவணைகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.



