
சென்னை:
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது.
இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.
இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையடுத்து இந்திய அணிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பது,
“மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் வாகை சூடியுள்ள நம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ள நம் இளம் வீராங்கனைப் படை, இன்னும் பல வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகிறேன்.”
