
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் 661 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. இந்தச் சூழலில் ஆர்சிபி அணி ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் அவர் உணர்வுப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
கிரிக்கெட் நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் உங்களை வேட்கையோடு வைத்திருப்பது எது? உங்களது சிறந்த ஆட்டத் திறன் வெளிப்படுவதற்கான காரணம் என்ன? என நெறியாளர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி பதில் அளித்தார்.
“அது ரொம்ப சிம்பிள். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது கேரியரில் முடிவு என்பது இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு நான் செயல்படுகிறேன். ஓய்வுக்குப் பிறகு என்னால் அது முடியவில்லையேயென நான் வருந்த விரும்பவில்லை. அதனால் நான் ஆடுகின்ற காலம்வரை எனது முழு பலத்தையும் ஆட்டத்தில் வெளிப்படுத்துவேன். ஓய்வை அறிவித்தபிறகு சில காலம் என்னைப் பார்க்க முடியாது” எனக் கோலி தெரிவித்தார்.
35 வயதான விராட் கோலி, கடந்த 2008 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். பல்வேறு சாதனைகளைச் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 எனச் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 522 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 26,733 ரன்கள் குவித்துள்ளார். 80 சதங்கள் பதிவு செய்துள்ளார்.


