Tirupati Temple:இனி ஆதார் அட்டை இருந்தால் தான் லட்டு கிடைக்கும்!

Advertisements

திருமலை:திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் (தலாரிகள்) தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெளிமார்க்கெட்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதங்களை விற்பனை செய்வதை நாங்கள் கண்காணித்துள்ளோம். இதைத் தடுக்க தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

மேலும் இடைத்தரகர்கள், தலாரிகளின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படைத் தன்மையுடன் வழங்கவும், டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பை அமல்படுத்தவும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுகளை 48 முதல் 62 வரை உள்ள கவுண்ட்டர்களில் பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நாங்கள் வேறு எதையும் கட்டுப்படுத்தவில்லை. தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர, முன்பு போலவே கூடுதல் லட்டுகளையும் வாங்கலாம்.மேலும் இந்த நடவடிக்கை லட்டு வினியோக அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *