
சென்னை உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே காரணம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மழையால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தும், நாலரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


