Sarathkumar:வீடு வீடாகப் பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான்!

சென்னை: ‘என் மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்ததாகச் செய்தி பரப்புகிறார்கள். ரூ.800 கோடி எப்படி இருக்கும் என்றே எனக்குத் தெரியாது’ என விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் சமீபத்தில் பா.ஜ., இணைந்துள்ள நடிகர் சரத்குமார் பேசுகையில் குறிப்பிட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து, சரத்குமார் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் விக்கிரவாண்டி தொகுதி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும். தெருத்தெருவாகச் சைக்கிளில் பேப்பர் போட்டவன் நான்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

மக்களால் உயர்த்தப்பட்டவன் தான் இந்தச் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். உங்கள் ரசிப்பு தன்மை என்னை உயர்த்தி இருக்கிறது. நான் உங்களால் வளர்க்கப்பட்டவன். உண்மையைப் பேச வேண்டும். உரக்க பேச வேண்டும் என நினைக்கிறேன். எனது மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அது எங்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. படித்தவர்களுக்கு வேலை இல்லை. வேலைக்கு ஏற்ற ஊதியம் இருக்க வேண்டும். இதற்குத் தொழில் வளம் நன்றாக இருக்க வேண்டும்.

முதுகெலும்பு

பணம் சம்பாதிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?. மக்களைப் பணம் சம்பாதிக்க வைப்பவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். விவசாயிக்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். நான் திடமாக இருக்க சுத்தமான பழக்க வழக்கங்கள் தான் காரணம். என்னை இப்போது விட்டால் கூட மூட்டைத் தூக்கி பிழைப்பேன். எனக்கு நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளதால் தான் இன்றும் திடமாக உள்ளேன்.

கஞ்சாவுக்கு அடிமை

தற்போதைய இளம் தலைமுறையினர் போதை, மது, கஞ்சாவுக்கு அடிமையாக வருகிறார்கள். முன்பு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகளுக்குப் பிரசாரம் செய்த நான், காலத்தின் கட்டாயத்தால் வல்லரசு நாடாக இந்தியா முன்னேற்ற வேண்டும் என்பதால் எனது கட்சியைப் பா.ஜ., வுடன் இணைத்தேன். தமிழகத்தில் பலரும் கட்சி நடத்தி வருகிறார்கள் பிறருக்கு துதிபாடும் நிலையில்தான் அவர்கள் உள்ளனர். தொடர்ந்து இரு திராவிட கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, இங்கு ஏன் 2026ம் ஆண்டுப் பா.ஜ., ஆட்சி செய்யக் கூடாது என்ற கேள்வியை நான் உங்கள் முன் வைக்கிறேன். இவ்வாறு சரத்குமார் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *