
பூந்தமல்லி அரசு உதவிபெறும் பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவைச் சாப்பிட்ட 17 குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பூந்தமல்லி அரசு உதவிபெறும் பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவைச் சாப்பிட்ட 17 குழந்தைகள் வாந்தி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தவெக அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார். விளம்பர மோகத்தை விடுத்து, உணவு தயாரிக்கும் இடங்களில் போதிய சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், இத்தகைய விபரீதங்கள் நடந்திருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதங்கள் நிகழாதவாறு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தைச் சோதிக்கத் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


