20 லட்சம் செல்போன் இணைப்புகளை முடக்க உத்தரவு!

Advertisements

மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லி:சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்குத் தெலைத்தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர். இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தொலைத்தொடர்பு துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் துறையினர் இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்தச் செல்போன்கள் மூலம் 20 லட்சம் எண்களைப் பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடி அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது. இந்தச் செல்போன் எண்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும். இதைத்தொடர்ந்து இந்த 28,200 செல்போன் எண்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவையெனக் கண்டறியப்படும் இணைப்புகளைத் துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *