OPS vs EPSகட்சியைக் கைப்பற்றுவதை விடக் காப்பாற்றுவதே முக்கியம் .!

Advertisements

கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ எனச் சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வதினும் கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதலின் காரணமாகப் பல பிளவுகளாக அதிமுக பிளவு பட்டுள்ளது. இதன் காரணமாகத் தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. தொண்டர்கள் விரக்தியும் உச்சத்தை அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலிலும் எப்போதும் இல்லாத வகையில் 40 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது மட்டுமில்லாமல் பல தொகுதிகளில் டெபாசிட்டையும் அதிமுக இழந்தது. இந்த நிலையில் அதிமுக ஒன்றிணைக்க வேண்டுமென முழக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அதற்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயாரெனக் கூறி இருந்தார். ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தினுடைய தொண்டர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டுகோள் எனக் கூறியுள்ளார். மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா,

இல்லை ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியைக் களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டிக் கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ எனச் சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வதினும் கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *