
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் சீரமைப்பு பணிகளுக்கான நிவாரணம் தொடர்பாக 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் நிர்மலா சீதாராமனிடம் சீரமைப்பு பணிகளுக்கான நிவாரணம் தொடர்பாக 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கியுள்ளார்.
இந்த மனுவில், தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் தென் மாவட்டங்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பாதிப்பில் பாலங்கள், சாலைகள், பள்ளிகள், பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. எதிர்பார்த்ததை விடப் பெரிய பாதிப்புகளைத் தமிழகம் சந்தித்துள்ளது.
எனவே இந்த நிவாரண பணிகளுக்கு மாநில அரசிடம் குறைந்த அளவே மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. இது மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்குப் போதுமானதாக இருக்காது. எனவே மத்திய அரசு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும், என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.



