
NEET | Ban | Udhayanidhi Stalin

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களைச் சந்தித்து ஏதேனும் ஒரு தொகுதியில் நின்றால் வெற்றி பெறுவாரா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கேள்வி எழுப்பியுள்ளார்…
சென்னை: தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்துத் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில்நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு 21 உயிர்களைப் பலி வாங்கி உள்ளது. நீட் தேர்வு மரணங்களுக்கு அதிமுக துணை நின்றது. நீட் மாணவர் உயிரிழப்பைத் தற்கொலையெனக் கூறுகிறோம், அது தற்கொலை அல்ல கொலை. உயிரிழந்த 21 குழந்தைகளின் அண்ணனாக நான் பேசுகிறேன்.
உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ பங்கேற்கவில்லை. சாதாரண மனிதனாக உதயநிதி ஸ்டாலினாகப் பங்கேற்று உள்ளேன்.
நாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் நீட் தேர்வுக்குக் கோச்சிங் எடுக்கிறார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களைச் சந்தித்து ஏதேனும் ஒரு தொகுதியில் நின்றால் வெற்றி பெறுவாரா ? ஆளுநரைக் கேள்வி கேட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் இன்றைய போராட்டம் முடிவல்ல ஆரம்பம். பொதுக் தேர்வின்போது தற்கொலை செய்துகொள்வது வழக்கமானது எனப் பாஜக தலைவர் கூறி உள்ளார். மாடு பிடிக்கப் போராடுகிறோம், மாணவர்கள் உயிருக்காகப் போராட கூடாதா?
நீட் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட வேண்டும். தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சி தேவையற்றது. அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவார்களா ? நீட் விவகாரத்தில் பிரதமரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட தயார் ? நீங்கள் வரத் தயாரா ? வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்டி, காங்கிரஸ் கட்சியை அமர வைத்தால் நீட் தேர்வு ரத்தாகும். ராகுல் காந்தி அந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்.
அதுதான் நான் சொல்லும் ரகசியம். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார்.


